– ஷாலினி சந்திரசேகர்
வெள்ளித்திரையில் தஞ்சையின் பிரம்மாண்டத்தைப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பொன்னியின் செல்வனும், மெய்யழகனும் தஞ்சையை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன. இந்தப் பயணிகள் கூட்டம் ஹோட்டல் உரிமையாளர்களின் கல்லாப் பெட்டியை நிரப்புகிறதா என்ற எண்ணம் எழவே, இது குறித்து அறிய, தஞ்சையிலுள்ள சில உணவகத்தினரை தொடர்பு கொண்டோம். ’
‘ராம் ஆரியாஸ்’ ஹோட்டல் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் பேசுகையில், “பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மை தான். உணவகம் மட்டும் வைத்திருந்தால் இது குறித்த வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் நாங்கள் ‘ஹோம் ஸ்டே’வும் வைத்திருப்பதால் இந்த மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. பெரிய கோயில் பக்கத்திலேயே இருப்பதால் கூட்டத்தை கண்கூடாக பார்க்கிறோம். சென்னை, பெங்களூர், கோவா போன்ற நகரங்களில் தான் முன்பு வார இறுதி கூட்டம் இருந்தது. தஞ்சையை பொறுத்தவரை எப்போதும் யாத்திரையாக வருவோர்கள் தான் அதிகம். அதுவும் அவர்கள் வாரம் முழுவதுமே வந்து போய்க்கொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு வார இறுதி நாட்களில் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வெளிநாட்டவரின் வருகை அதிகமாக இருந்தது. அது தற்போது பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளியூர் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த போக்கு இன்னும் நீண்ட நாள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்” என்றார். ’இந்த மாதிரியான வித்தியாசத்தை இதற்கு முன்பு கண்டிருக்கிறீர்களா?’ என்ற நம் கேள்விக்கு, “தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டை கொண்டாடிய போது, இதே மாதிரியான சுற்றுலா பயணிகளை அதிகம் காண முடிந்தது” என்றார்.
‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் & ஹோட்டல்’ நிர்வாக இயக்குநர் ஜெயந்த், “தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெரிதளவில் அதிகரிக்கவில்லை. சீசன் காலங்களில் கோயிலைப் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள்ன் வருகிறார்கள். மற்றபடி, வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் தான் வருகிறார்களே தவிர, பெரியளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை” என்றார்.
தஞ்சாவூர் மாவட்ட ஹோட்டல் அசோசியேசன் பொருளாளர் திரு.ரமேஷ் வாசவி (வாசவி ஹோட்டல்) அவர்களை தொடர்பு கொண்டபோது, ”சுற்றுலா பயணிகள் அதிகரித்தாலும், உணவகத்துறையைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படியான தொழில் முன்னேற்றம் இல்லை. வரும்போதே பயணிகள் அவர்களுக்குத் தேவையான உணவையும் சமைத்து எடுத்து வருகிறார்கள். அதே போல் கூட்டம் அதிகரித்தாலும், நாளுக்கு நாள் உணவகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நிலையான வணிகத்தைப் பெறுவதும் பெரும் சவால் தான். உணவுத்துறையில் அனுபவம் இல்லாதவர்கள் கூட, உணவகம் ஆரம்பிக்க முன்வருகிறார்கள், இதனால் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிறது. தஞ்சையை பொறுத்தவரை வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வணிகம் நன்றாக இருக்கிறது” என்றார்.

