சென்னையின் பிரபல உணவகச் சங்கிலியான ‘சங்கீதா’ (Sangeetha) மற்றும் அதன் முன்னாள் ஃபிரான்ச்சைஸி (Franchisee) நிறுவனமான ‘கீதம்’ (Geetham) ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தக முத்திரை (Trademark) மீறல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். அதே சமயம், இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாகப் போக விரும்பினால் அதற்கு அனுமதி அளிப்பதாகவும், சமரசம் ஏற்பட்டால் அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கும் பின்னணியும்
சங்கீதா கேட்டரர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம் ஆஜராகி வாதிட்டார். அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள் பின்வறுமாறு… 1985-ல் பி.சுரேஷ் மற்றும் பி.ராஜகோபால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘சங்கீதா’, இன்று 29 உள்நாட்டு கிளைகள் மற்றும் 21 வெளிநாட்டு கிளைகளுடன் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளது.
2009 முதல் ராஸ்னம் புட்ஸ் (Rasnam Foods) நிறுவனத்திற்கு வேளச்சேரி, துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சங்கீதா உணவகங்களை நடத்த ஃபிரான்ச்சைஸி உரிமை வழங்கப்பட்டது. மே 31, 2022 அன்று இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ராஸ்னம் புட்ஸ், அடுத்த நாளிலிருந்தே (ஜூன் 1) அதே இடங்களில் ‘கீதம்’ என்ற பெயரில் உணவகங்களை தொடங்கியது. சங்கீதா என்ற பெயரின் நற்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதிலிருக்கும் ‘கீதம்’ என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கீதம் தரப்பு விளக்கம்
ராஸ்னம் புட்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறியதாவது, மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதால், அந்த உணவகத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி கோரினோம். ஆனால் சங்கீதா நிர்வாகம் அதற்கு மறுத்ததால் இந்த மோதல் உருவானது.
நாங்கள் வெற்றிகரமாக ஒரு வருடம் ‘கீதம்’ உணவகங்களை நடத்திய பிறகே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்பணமாக வாடகை செலுத்தியிருந்த காரணத்தாலேயே அதே இடங்களில் உணவகங்களைத் தொடர்ந்தோம்.
சங்கீதா உணவகத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னணி நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களை வழங்கியுள்ளோம். நீதிமன்ற உத்தரவுப்படி லோகோ நிறங்களையும் மாற்றியுள்ளோம்.
சமரசப் பேச்சுவார்த்தை
வழக்கின் இறுதியில், இழப்பீடுத் தொகையாக சங்கீதா தரப்பு ₹130 கோடி கோரியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தத் தொகை ₹3 கோடி அளவில் இருந்தால் சமரசத்திற்கு வாய்ப்பிருப்பதாக கீதம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

