ச.ஷாலினி
மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ‘பாண்டியன் ஹோட்டல்’ (தற்போது பார்ச்சூன் பாண்டியன்) வசம் இருந்த 5.9 ஏக்கர் அரசு நிலத்தை தமிழக அரசு அதிரடியாக மீட்டெடுத்துள்ளது.
என்ன நடந்தது?
கடந்த 1968-ம் ஆண்டு, அரசுக்குச் சொந்தமான 5.9 ஏக்கர் நிலம் 25 ஆண்டு கால குத்தகைக்கு பாண்டியன் ஹோட்டல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் 2008-லேயே முடிவடைந்த பின்னரும், ஹோட்டல் நிர்வாகம் நிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
நீதிமன்ற வழக்கு
நிலத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய, அரசு ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்துமாறு 2015-ல் உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகையைச் செலுத்த முடியாத ஹோட்டல் நிர்வாகம், நீதிமன்றத்தை நாடியது. பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், குத்தகை முடிந்த பிறகும் அரசு நிலத்தை வைத்திருந்தது தவறு என்றும், சுமார் ரூ.300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இந்த நிலத்தை அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிலத்தை மீட்க ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC-Tamil Nadu Tourism Development Corporation) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் மீட்கப்பட்ட அடுத்த நாளே அங்கேயே ‘ஓட்டல் தமிழ்நாடு’ (Unit-3) அலுவலகம் தொடங்கப்பட்டு, முன்பதிவுகளும் ஆரம்பமாகியுள்ளன.
ஏற்கனவே இக்கழகத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 1, அழகர்கோவில் ரோட்டில் யூனிட் 2 ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது யூனிட்டாக ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன் என்ற பெயரில் இது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

