தமிழகத்தின் பாரம்பரிய கொங்கு நாட்டு சமையல் கலைக்கு பெயர் பெற்ற ‘ஈரோடு அம்மன் மெஸ்’ (EAM) உணவகம், தனது முதல் இந்தியக் கிளையை பெங்களூருவில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் இந்த புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இருந்து உள்நாட்டுக்கு
சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, கத்தார் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்கனவே 14 கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் ஈரோடு அம்மன் மெஸ்ஸின் 15-வது கிளை இதுவாகும். அபுதாபி, ஜொகூர் பாரு (மலேசியா), மெல்போர்ன், சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய நகரங்களிலும் புதிய கிளைகளைத் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவின் பிற மாநிலங்களில் திறக்கப்படும் முதல் கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப மையமான குந்தலஹள்ளி, புரூக்ஃபீல்டு (ITPL மெயின் ரோடு) பகுதியில் இந்த உணவகம் புதிய கிளையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தின் நிறுவனரும், தலைமைச் சமையல் கலைஞருமான (Chef) பிரபு கூறுகையில், “கொங்கு நாட்டு உணவுகளுக்கு எப்போதும் தனித்துவமான வரவேற்பு உண்டு. ஆனால், அதற்கு இன்னும் பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். எங்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் விருந்தோம்பலை, உணவை நேசிக்கும் பெங்களூருவின் பன்முகத்தன்மை கொண்ட மக்களுக்கு அறிமுகப்படுத்த இந்த கிளை ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
பாரம்பரியம் மாறாத கொங்கு சுவை:
உள்ளூர் மசாலாப் பொருட்கள், பாரம்பரிய சமையல் முறைகள் ஆகியவற்றைக் கொண்டு, வணிக ரீதியான எந்தவொரு சமரசமும் இன்றி உண்மையான கொங்கு நாட்டு சுவையை வழங்குவதே தங்களின் நோக்கம் என்று இந்த உணவக நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆடம்பரக் குறைபாடுகள் அற்ற, ஆனால் சுவையிலும் தரத்திலும் சமரசம் செய்யாத ‘மெஸ்’ (Mess) பாணியை இவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த உணவகத்திற்கு இந்திய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மலேசிய முன்னாள் பிரதமர்களான இஸ்மாயில் சப்ரி யாகோப், முஹைதீன் யாசின் உள்ளிட்ட பல சர்வதேசத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரும் இந்த உணவகத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் இந்த உணவகத்திற்கு ‘கல்னரி கல்ச்சர்’ (Culinary Culture Award) விருதும் கிடைத்துள்ளது.
ஏன் பெங்களூரு தேர்வு?
தமிழகத்திற்கு வெளியே அதிக அளவில் தமிழர்கள் வாழும் நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த காஸ்மோபாலிட்டன் (Cosmopolitan) நகர மக்கள், பிராந்திய உணவுகளை விரும்பி உண்பவர்களாக உள்ளனர். இதன் காரணமாகவே, இந்திய அளவிலான தங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கு முதல் புள்ளி நாற்றாக பெங்களூருவைத் தேர்ந்தெடுத்ததாக உணவக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிளைகளைப் போலவே, இந்தியாவிலும் தங்களின் தரம் மற்றும் பாரம்பரிய சமையல் ரகசியங்கள் துல்லியமாகப் பின்பற்றப்படும் என்றும், விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த உணவகம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஈரோடு அம்மன் மெஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப காலப் பயணமும் அசுர வளர்ச்சியும்:
ஒரு சிறிய ஊரில் சாதாரண உணவகமாகத் தொடங்கப்பட்ட ஈரோடு அம்மன் மெஸ், இன்று உலகளாவிய பிராண்டாக வளர்ந்து நிற்பதற்குப் பின்னால் பல வருட உழைப்பும், தரத்தில் காட்டிய அர்ப்பணிப்பும் உள்ளது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்த உணவகம், கொங்கு நாட்டுக்கே உரிய பிரத்யேக மசாலாப் பதங்கள் மற்றும் கைமணத்தால் குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது. ‘மெஸ்’ கலாச்சாரத்தின் எளிமையையும், வீட்டுச் சாப்பாட்டின் உணர்வையும் மாறாமல் வழங்கியதே இவர்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

