-ச ஷாலினி
90-கிட்ஸ் அனைவருக்கும் நினைவில் நிற்கும் விளம்பரங்களில் ஒன்று ‘வாஷிங் பவுடர் நிர்மா’. ஒருகாலத்தில் வெறும் சலவைப் பவுடர் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், காலப்போக்கில் தனது வர்த்தகத்தை பல துறைகளுக்கு விரிவுபடுத்தி இன்று ₹12,000 கோடி மதிப்புள்ள குழுமமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
நுகர்வோர் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிர்மா குரூப், தற்போது தனது வர்த்தகத்தை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் ஹோட்டல் துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் நிர்மா குழுமம், தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் நோக்கில் ஹோட்டல் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. தற்போது சோப்பு, சோடா ஆஷ், காஸ்டிக் சோடா, சிமெண்ட், சுகாதார சேவை உள்ளிட்ட பல துறைகளில் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனம், உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.
இந்த ஹோட்டல் ஆடம்பர சந்தையை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 555 அறைகள் இருக்கும். அகமதாபாத்தின் சர்கேஜ் – காந்திநகர் நெடுஞ்சாலையில் இந்த ஹோட்டல் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த ஹோட்டல் திட்டம், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹோட்டலை நிர்மா குழுமம் நேரடியாக இயக்க திட்டமில்லை என்றும், அதற்காக சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL), ஹையாட் ஹோட்டல்ஸ், மாரியட் இன்டர்நேஷனல் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
பெரிய ஹோட்டல் பிராண்டுகள் இணைந்தால், ஹோட்டலின் தரத்தை உயர்த்த முடியும் என்பதோடு, உலகளாவிய அனுபவத்தையும் கொண்டு வர முடியும் என்பது நிர்மா குழுமத்தின் நம்பிக்கை.
இந்த ஹோட்டல் 2030 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்பே செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

