இந்த கட்டுரையை வழங்குபவர்

சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், பாரம்பரியத்துடன் நவீனத்தை புகுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ‘மண்வாசனை டிரடிஷனல் ஃபுட் புராடெக்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மேனகா. தவிர, மாப்பிள்ளை சம்பா முதல் தூய மல்லி வரை, பாரம்பரிய அரிசி வகைகளைச் சரியான பக்குவத்தில் ‘ஈர மாவாக’ மாற்றி, இன்று ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி உணவகங்களுக்குத் தடையின்றி விநியோகம் செய்து வருகிறார். அவரிடம் பே
பாரம்பரிய சுவையை மாற்றாமல் இன்றைய ‘Gen Z’ தலைமுறைக்கு ஏற்றவாறு உணவை மாற்றுவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்கள் பலமே நாங்கள் பொருட்களை இயற்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறுவது தான். என்ன செய்தாலும் இயற்கை முறையில் விளையும் எந்தப் பொருளுளின் உண்மையான சுவையும் மாறாது. ஒவ்வொரு பொருளையும் சுத்தம் செய்து, வறுத்து பாக்கெட் செய்வதால் அதன் சுவையும், தரமும் மாறுவதில்லை. கருப்பு கவுனி அரிசியில் ’ஐஸ் கிரீமை’ நாம் தான் அறிமுகப்படுத்தினோம். இன்று பல திருமண விருந்துகளிலும், கடைகளிலும் அதைக் கேட்கிறார்கள்.
கருப்பு கவுனியில் கஞ்சி, பொங்கலை தாண்டி ஐஸ் கிரீம் செய்வதற்கான சந்தை ஆய்வு (Market Research) என்ன?
இந்தத் துறையில் 15 வருடங்களாக இருக்கிறேன். அப்போது ஆரோக்கிய உணவு சார்ந்த நிறைய கண்காட்சி மற்றும் கடைகளுக்கு செல்வது வழக்கம். அங்கு ராகி லட்டு, கம்பு லட்டு, கஞ்சி, கூழ் போன்றவைகள் தான் இருக்கும். கோடை காலங்களில் குடும்பத்துடன் செல்லும் போது குழந்தைகளுக்கு ஏதாவது திண்பண்டம் தேடுவோம். ஆனால் கஞ்சி, கூழ் போன்றவற்றை எல்லாம் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் அது உடலுக்கு நல்லது என நாம் அவர்களை வற்புறுத்த வேண்டி வரும். இப்படியான சூழலில் குழந்தைகளே விரும்பி சாப்பிடும்படி ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது தான் கருப்பு கவுனி, ராகி, கம்பு போன்றவற்றில் செய்யும் ஐஸ் கிரீம்கள். அதுவும் சர்க்கரை இல்லாமல், பனங்கற்கண்டு சேர்த்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றனர்.

பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் செய்ய நீங்கள் கையாளும் யுக்திகள் என்ன?
மக்கள் பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங்கிற்கு 50% முக்கியத்துவம் தந்தாலும், உள்ளே இருக்கும் பொருளை தான் முழுவதுமாக பார்க்கிறார்கள். உணவு சுவையாக இருக்குமா, இயற்கையானதாக இருக்குமா, ஆரோக்கியமாக இருக்குமா என்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். உணவு நன்றாக இருந்தால் போதும் என்பவர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டையும் பார்ப்பதில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பேக்கேஜிங் தான் மிக முக்கியம். சத்துமாவு, சிறுதானிய தோசை மிக்ஸ், கருப்பு உளுந்து குழிப்பணியார மிக்ஸ் போன்றவைகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகம் வாங்குகிறார்கள். இப்போது மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய ஈர மாவுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
நன்றாக இருக்கிறது. மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, பல சிறுதானியம், கம்பு ஆகியவற்றில் இட்லி – தோசை மாவு தினமும் தயாரிக்கிறோம். நிறைய ஹோட்டல்கள், கிளவுட் கிச்சன்கள், கேட்டரிங், திருமண விழாக்கள், கல்லூரி உணவகங்கள், கடைகள் போன்றவற்றிற்கு இந்த மாவை விநியோகம் செய்கிறோம். வீடுகளில் இருப்பவர்களுக்கும் இந்த மாவை அரைக்கத் தெரிவதில்லை. ஆகையால் இப்போது இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

தோசை மிக்ஸ் தயாரிப்பில் ஏதேனும் சவால் இருக்கிறதா?
பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய தோசை வகைகளுக்கு தேவையானதை கழுவி சுத்தப்படுத்தி, காயவைத்து செய்கிறோம். ஆனால் இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் தோசை மொறு மொறுவென்று பேப்பர் போல வரும் என நினைக்கிறார்கள். ஆனால் இது சற்று தடிமனாக அடை தோசை போலத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது தான் பெரிய சவால். ஆனால் ஈர மாவில் இந்த பிரச்னை இல்லை.
வெறும் விற்பனையோடு நிறுத்தாமல், மற்றவர்களுக்கு ஒர்க்ஷாப் மூலம் கற்றுக்கொடுக்கிறீர்கள். இது உங்கள் வணிகப் போட்டியை (Competition) அதிகரிக்காதா?
இந்தத் தொழிலில் நிறையப் பேர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். நானும் அப்படித்தான், முதல் நிலையில் நிறைய கஷ்டப்பட்டேன். இப்போது தவறு எங்கு நடக்கும் என்பது தெரிகிறது, அதனால் மற்றவர்களின் தடுமாற்றங்களை போக்குகிறேன். நான் தமிழக அரசின் ‘ஸ்டார்ட் அப் டிஎன்’-னில் தேர்வாகி, அவர்கள் எனக்கு நிதியுதவி செய்தார்கள். நிறையப் பேருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) கடன் திட்டங்கள் பற்றியும், அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் தெரியாது. இதை எல்லாம் நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அடிப்படையான உணவு தயாரிப்புகளை சொல்லிக் கொடுத்தால், அவர்கள் கிரியேட்டிவாக பல விஷயங்களை செய்கிறார்கள். என் ஒர்க் ஷாப்பில் கலந்துக் கொண்டு தொழில் முனைவோராக மாறிய பலர் இருக்கிறார்கள்.

சிறு தானியங்களின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் உங்களை பாதிக்கிறதா?
பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. முதன் முதலில் நான் கருப்பு கவுனியை வாங்கும் போது கிலோ 80 ரூபாய். இன்று ஒரு கிலோ அரிசி 280 ரூபாய்க்கு மேலாகிவிட்டது. இன்னும் மக்கள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டும் போது விளைச்சல் அதிகமாகும். அதனால் விலை குறைய வாய்ப்புள்ளது.
இயற்கை முறை பாரம்பரிய பொருட்களை குறைவான விலையில் வழங்குவது எப்படி சாத்தியம்?
நாங்கள் அனைத்து மூலப் பொருட்களையும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்குவதால் இது சாத்தியமாகிறது. எங்களது விநியோக சங்கிலி கூட மிக எளிமையானது தான். விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டால், அவர்கள் அனுப்பி விடுவார்கள். நாங்கள் பெற்றுக் கொள்வோம், அவ்வளவு தான்.
உங்கள் முதலீடு மற்றும் இன்றைய வருமானம் என்ன?
15 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்தபடியே 500 ரூபாய் முதலீட்டில் இதைத் தொடங்கினேன். இப்போது மாதம் 15 லட்சம் வரை வியாபாரமாகிறது. சிறுதானியங்களில் சாதனை புரிந்ததற்காக ‘ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்’, ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ உள்ளிட்ட நான்கு உலக சாதனையும் (World Record) செய்துள்ளேன்.
விரிவாக்கத் திட்டம் இருக்கிறதா?
நமது கடை சென்னை சூளைமேட்டில் உள்ளது. இப்போதைக்கு தயாரிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். அதன் பிறகு தான் விரிவு படுத்தும் திட்டமுள்ளது.
இந்த கட்டுரையை வழங்குபவர்


